ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்குத் தாலிகட்டிய இளைஞரைப் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சான்றோர் குப்பத்தைச் சேர்ந்த 25 வயதான ஜெகன், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் கல்லூரியில் படிக்கும் போதே ஒரு தலை பட்சமாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த இளம் பெண்ணுக்கு வேறொரு மாப்பிள்ளையுடன் வீட்டில் நிச்சயமாகி உள்ளது. இதனையடுத்து, அந்த பெண்ணிடம் ஜெகன் வந்து காதலை சொல்லியுள்ளார். ஆனால், அந்த பெண் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால், நண்பர்களுடன் ஆலோசித்த ஜெகன், ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி, இன்று காலை வாணியம்பாடி செல்லக்கூடிய அரசு பேருந்தில் அந்த பெண் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அதே பேருந்திலிருந்த ஜெகன், மெதுவாக அந்த பெண்ணின் அருகில் வந்து கண் இமைக்கும் நேரத்தில், திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் கட்டியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் பயத்தில் கத்தி கூச்சலிடவே, பேருந்திலிருந்த சக பயணிகளும், ஜெகனை அடித்து உதைத்து, வாணியம்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞரைக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.