மெடிக்கலில் மருந்து வாங்க வந்த 2 சிறுமிகளிடம், ஊசியைக் காட்டி மிரட்டி, கடை உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை செல்லூர் போஸ் தெருவைச் சேர்ந்த சங்கர் கணேஷ், அந்த பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார்.

இதனிடையே, நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது மற்றும் 10 வயது ஆன சகோதரிகள் இருவர், தங்களுடைய தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி மாத்திரை வாங்க வந்துள்ளனர்.

அந்த நேரத்தில் நிறையப் பேர் மருத்து வாங்க வந்த நிலையில், சிறுமிகளையும் மட்டும் காக்க வைத்துவிட்டு, மற்ற வாடிக்கையாளர்கள் அனைவரையும் அனுப்புவதில் சங்கர் கணேஷ் தீவிரம் காட்டி உள்ளார்.

இதனையடுத்து, இறுதியாகச் சிறுமிகள் மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்த நிலையில், இருவரையும், கடைக்குள் அழைத்து, இருவரின் ஆடைகளை அவிழ்த்து, மாறி மாறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இருவரும் வலியால் கத்த முயன்ற நிலையில், அங்கிருந்த ஊசியை எடுத்து, “இது விஷ ஊசி என்றும், கத்தினால் ஊசி போட்டுக் கொன்றுவிடுவேன்” என்றும் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து, அனுப்பி உள்ளார்.

வீடு திரும்பிய இரு சிறுமிகளும், ஒரு வித பயத்துடன் காணப்பட்டுள்ளனர். இது குறித்து, அவரது தாயார் கேட்டபோது, தங்களுக்கு நேர்ந்த அவலங்கள் குறித்துக் கூறியுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சங்கர் கணேஷை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.