சிறுமியைப் பலாத்காரம் செய்த தாயின் 2 வது கணவர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் இலவங்கார்குடி பகுதியைச் சேர்ந்த 35 வயது சின்னப்பா என்பவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கமலாபுரத்தைச் சேர்ந்த சித்ரா என்பவரை, சின்னப்பா 2 வதாக திருமணம் செய்துகொண்டார்.

சித்ராவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், அவர் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனையடுத்து, சின்னப்பாவைத் திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த முதல் கணவரின் பெண் குழந்தைக்கு இப்போது 17 வயது ஆகிறது.

இதனிடையே, சித்ரா வீட்டில் வந்து தங்கும்போதெல்லாம், சித்தாராவின் முதல் மகளை, தன் மகள் என்று பாராமல், அவருக்குச் சின்னப்பா தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டே வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில், தன் மகள் என்று கூட பாராமல், 17 வயது மகளை அவர் அடித்துத் துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண், வீட்டிலிருந்த எலி மருந்தைக் குடித்துவிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் மீட்டு, அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் உயிர் பிழைத்தார். இதனையடுத்து, நேற்று அவர் வீடு திரும்பிய நிலையில், திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனக்கு நேர்ந்த பாலியல் துயரங்கள் குறித்து புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சின்னப்பாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.