42 வயது பெண்ணை பலாத்காரம் செய்யும் முயற்சியில், அவரை காயப்படுத்திய 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு அடுத்த கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி 42 வயதான பெண், வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான மணிகண்டன், அங்குள்ள மதுக்கடையில் நன்றாகக் குடித்துவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில், அந்த பெண் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்.

அந்த பெண் கதவைத் திறந்ததும், குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். உடனே, அந்த பெண் தண்ணீர் கொண்டு வர சமையலறைக்குள் போகவே, பின்னாலேயே சென்ற மணிகண்டன், அந்த பெண்ணை பலவந்தமாக, கட்டியணைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அந்த பெண்ணும், போதை ஆசாமியுடன் கடைசி வரை போராடி உள்ளார். இந்த போராட்டத்தில், அந்த பெண்ணுக்கு உடம்பில் பல இடங்களில் கீறல் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

போதை ஆசாமியும் பலாத்காரம் மோகத்தில், அந்த பெண்ணை பலவந்தமாக அடித்துத் துன்புறுத்தி உள்ளார். ஆனால், கடைசி வரையில் அந்த பெண் விடாப்பிடியாக அவனோடு போராடியதால், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, இருவரும் சேர்ந்து அங்குள்ள திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மணிகண்டனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மதுபோதையில் 42 வயது பெண்ணுக்கு 24 வயது இளைஞர் ஒருவர், பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.