பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள திருவோணத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதான சாரங்கபாணி, ஆசிரியராக பணியாற்று வந்தார்.

இந்நிலையில், பள்ளி வகுப்பறையில் மாணவிகளிடம் ஆசிரியர் சாரங்கபாணி ஆபாசமாகப் பேசுவதாக, சிறுமிகளின் பெற்றோர்கள், தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, அவர் திருக்காட்டுப்பள்ளி அடுத்துள்ள இளங்காடு அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, மீண்டும் திருவோணம் அரசுப் பள்ளிக்குப் பணி மாறுதல் பெற்று பணிக்குத் திரும்பியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பள்ளி மாணவி ஒருவர், ஆசிரியர் சாரங்கபாணி, மாணவிகளைத் தனியாக அழைத்துச் சென்று செல்போனில் ஆபாசப் படம் காட்டுவதாகக் குற்றம்சாட்டினார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அனைவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிரியர் சாரங்கபாணியை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.