ஆண்களின் ஆபாச வீடியோவை, போலீசுக்கே அனுப்பிய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையை சேர்ந்த 29 வயதான பிரேம் கிரண், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் அறிவியல் ஆசிரியராக உள்ளார். அத்துடன் சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தில் சொந்தமாக டியூசன் சென்டரும் நடத்தி வருகிறார். இந்த டியூசன் சென்டரில் 40 க்கும் அதிகமான மாணவர்கள் படிப்பதாக கூறப்படுகிறது.

ஒருபால் ஈர்ப்பு கொண்ட பிரேம் கிரணிடம், அவரது நண்பர்களில் ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட போலீசாரின் வாட்ஸ் அப் எண்ணைக்கொடுத்து, இது என்னுடைய புதிய நம்பர் என்று கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட குறை தீர்க்கும் பிரிவு செல்போன் எண்ணிற்கு கடந்த ஜூன் 17 ஆம் தேதி, சில ஆபாசப் போட்டோக்கள், சில வீடியோக்கள் வந்துள்ளன. அதில், சில ஆண்கள் நிர்வாணமாக இருப்பது, பாலியல் உறவு கொள்வது உள்ளிட்ட வீடியோக்கள் இருந்துள்ளது. இதனைப் பார்த்த போலீஸ் கண்ணன், கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

போலீசாரின் செல்போன் எண்ணுக்கே தைரியமாக ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பியது யார்? என்பது குறித்து விசாரிக்குமாறு, ராமநாதபுரம் காவல் நிலையத்தில், போலீஸ் கண்ணன் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்கப் பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த செல்போன் எண் கோவையை சேர்ந்த பிரேம் கிரண் என்பவரது பெயரில் இருந்ததை கண்டுபிடித்தனர். பிறகு, கோவை சென்ற தனிப்படை போலீசார், பிரேம் கிரணை கைது செய்து, ராமேஸ்வரம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், “நண்பர்களுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, தவறுதலாக ராமநாதபுரம் குறைதீர்க்கும் எண்ணிற்கு ஆபாசப்படங்களை அனுப்பியதாக” பிரேம் கிரண் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து ஆபாசமான, அருவருக்கத்தக்க போட்டோக்களை அனுப்பிய ஆசிரியர் பிரேம் கிரண் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார், காவல்நிலைய ஜாமினில் அவரை விடுவித்தனர்.

இதற்கிடையே, மகன் பிரேம் கிரண் கைது செய்யப்பட்டது தெரியாமல், அவரது தந்தை “எனது மகனைக் காணவில்லை” என்று, கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.