காதலுக்கு நண்பனின் உயிர் பலிகொடுக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதான கிருபாகரன், கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கிருபாகரனுக்கும் அங்குள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கும் 17 வயது சென்னை மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் சில மாதங்கள் காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 6 ஆம் தேதி, அந்த பெண் காதலனுடன் மாயமானார். இது தொடர்பாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, கிருபாகரனின் நெருங்கிய நண்பன் சதிஷ்குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, பயந்துபோன சதிஷ், அவர்கள் பாண்டிச்சேரியில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து, வீடு திரும்பிய சதிஷ்குமார், காவல் நிலையம் சென்று வந்த அவமானத்தாலும், நட்புக்கு உண்மையாக இருக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்விலும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமாரின் பெற்றோர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, புதுச்சேரிக்கு விரைந்த போலீசார், மாணவியை மீட்டு கிருபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கிருபாகரன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், அவர் மது பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது மனைவியிடமிருந்து பிரிந்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, 17 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்ய முயன்ற குற்றத்திற்காக, கிருபாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.