புதுக்கோட்டையில் குழந்தையைக் கடந்த முயன்றவரைப் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வடசேரி பட்டியைச் சேர்ந்த சுந்தர் ராஜ், குடிபோதையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளார்.

அங்கு குழந்தைகள் பிரசவ வார்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த அவர், அங்குள்ள படுக்கையில் தாயும் குழந்தையும் அருகருகே படுத்திருப்பதைக் கவனித்துள்ளார். அப்போது, தாய் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதைக் கவனித்த அவர், குழந்தையைத் தூக்கிக் கடத்த முயன்றுள்ளார்.

அப்போது, கண்விழித்த குழந்தை அழத் தொடங்கியது. அந்த கன நேரத்தில் கண்விழித்த தாய், குழந்தையைத் தூக்கி வைத்திருந்தவரை பார்த்ததும், கடும் அதிர்ச்சியடைந்து, சத்தம் போட்டுக் கூச்சலிட்டார்.

இதனையடுத்து, சுந்தர் ராஜ் அங்கிருந்து குழந்தையுடன் தப்பியோட முயன்றுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, மருத்துவமனையில் இருந்தவர்கள் ஓடிவந்து, சுந்தர் ராஜை மடக்கிப் பிடித்து குழந்தையை மீட்டனர். இதனையடுத்து, அவருக்குத் தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, புதுக்கோட்டையில் மருத்துவமனைக்குள் புகுந்து, மர்ம நபர் ஒருவர் குழந்தையை திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.