வீடு புகுந்து தாய் முன்னிலையிலேயே, 9 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த நித்தியா என்ற பெண், கணவரை விட்டுப் பிரிந்து தனது 3 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

தினமும் கூலி வேலைக்குச் சென்று வரும் நித்தியா, தனது 3 பெண் குழந்தைகளையும் தனது தாயாரின் கண்காணிப்பில் விட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், இரவு நேரத்தில் நித்தியா அவரது 3 பெண் பிள்ளைகள் மற்றும் நித்தியாவின் தாயர் என 5 பெண்களும், வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

இந்த பெண்கள், ஆண் துணையில்லாமல் இருப்பதை நன்றாகத் தெரிந்துகொண்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் 22 வயதான கிறிஸ்டோபர், மது போதையில் நித்தியா வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அங்கு, நித்தியா அருகில் கடைசி ஆளாக உறங்கிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியின் அருகில் படுத்துக்கொண்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது, சிறுமி பயந்து வலியால் துடிக்கவே, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அனைவரும் எழுந்து பார்த்துள்ளனர். அப்போது, கிறிஸ்டோபர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து, மற்ற 4 பெண்களும் கிறிஸ்டோபரை கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதில், அடி தாங்க முடியாமல் கிறிஸ்டோபர் தப்பி ஓடியுள்ளார்.

அப்போது, சத்தம் கேட்டு பக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் கண் விழித்துள்ளனர். அந்த நேரத்தில் கிறிஸ்டோபர் அந்த வழியாகத் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், கிறிஸ்டோபரை துரத்திச் சென்று பிடித்து, தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர், ஊர்மக்களே அவுடையார்கோவில் காவல் நிலையத்தில் கிறிஸ்டோபரை ஒப்படைத்தனர். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், கிறிஸ்டோபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, 9 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் வீடு புகுந்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம், புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.