“நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும்” என்று பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.

இந்திய பகுதியான லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து, இந்தியாவில் பயன்படுத்தப்படும் சீன பொருட்கள், சீனாவின் செயலிகள் உள்ளிட்டவற்றைப் புறக்கணிக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்தியாவில் இதுவரை சீன பொருட்களைப் பயன்படுத்தி வந்த நிலையில், அதற்குப் பதிலாக மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து கூகுளில் அதிகம் பேர் தேடி வருகின்றனர்.

மேலும், சீன உணவுகளை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், இந்தியாவில் வர்த்தக ரீதியாக 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “எரிசக்தி துறையில் இந்தியாவை சுயசார்பாக மாற்ற இன்று ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டார்.

அத்துடன், “வணிக ரீதியிலான பயன்பாட்டிற்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தைத் தொடங்கி வைப்பதாகவும்” பிரதமர் மோடி பெருமையோடு கூறினார்.

“இந்த 41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என எதிர்பார்ப்பு உள்ளதாகவும்” பிரதமர் குறிப்பிட்டார்.

“கொரோனா பாதிப்பை வாய்ப்பாக பயன்படுத்தி நமது நாடு இறக்குமதியை குறைத்து, தற்சாப்பு பொருளாதார நாடாக உருவெடுக்கும்” என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்பாக, “வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து நாம் வளம் பெற வேண்டிய அவசியமில்லை என்றும், சுய சார்பு இந்தியாவாக மாற இறக்குமதியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலை இந்தியாவில் வர வேண்டும்” என்றும் பிரதமர் மோடி சூளுரைத்தார்.

முன்னதாக, ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா தேர்வாகியதற்கு பிரதமர் மோடி தனது டிவிட்டரில் நன்றி தெரிவித்திருந்தார்.

அதில், “ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா தேர்வாகியதற்கு, உலகளாவிய சமூகம் காட்டியுள்ள பெரும் ஆதரவுக்கு மிக்க நன்றி” என்றும் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், “உலகளாவிய அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இந்தியா இணைந்து செயல்படும்” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.