அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய புதிய பாதுகாப்பு வழிமுறைகளை, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் குறையாத நிலையில், 4 வது முறையாக வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த 4 வது ஊரடங்கு காலத்தில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு பணிகளுக்குத் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய புதிய பாதுகாப்பு வழிமுறைகளை, மத்திய சுகாதாரத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

- அனைத்து அலுவலகத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே பணிகளைத் தொடர வேண்டும்.

- அலுவலக கட்டிடம் போதுமான அளவு கிருமி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியைத் தொடங்க ஏற்றதாக அறிவிக்கப்படும் வரை, அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்.

- ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால், முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை.

- பெரிய அளவில் பாதிப்பு இருந்தால், கிருமி நீக்கம் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும்.

- ஊழியர்கள் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டால், அலுவலகம் செல்லக்கூடாது.

- ஊழியர்களுக்குக் காய்ச்சல் இருந்தால், உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடமிருந்து மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

- கொரோனா உறுதி செய்யப்பட்டாலோ, சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினாலோ அவர்கள் தங்கள் அலுவலக அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

- கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும், மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.