கள்ளக் காதலை விட முடியாமல் வெறிபிடித்த காமூகன், பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு, தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அடுத்த துளுக்கர்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான ரமேஷ்பாபு, தூத்துக்குடியில் உள்ள இரும்பு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அங்கு, தன்னுடன் பணியாற்றி வந்த முருகன் என்பவரின் மனைவி பகவதியுடன் நெருங்கிப் பழகி உள்ளார்.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் தகாத உறவாக மாறியது. இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரித்த நிலையில், இந்த விவகாரம் முருகனுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தனது மனைவியை முருகன் கண்டித்துள்ளார். இதன் காரணமாகப் பகவதி, வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், பகவதியின் வீட்டிற்கு வந்த ரமேஷ்பாபு, பகவதியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது, பழைய பழக்கத்தைத் தொடர முடியாது என்று பகவதி உறுதிப்படக் கூறவே, ஆத்திரமடைந்த ரமேஷ்பாபு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பகவதியின் கழுத்தை அறுத்துவிட்டு, தப்பி ஓடியுள்ளார்.

இதில், பகவதி சத்தம்போட்டுக் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனையடுத்து, சிலர் ரமேஷ்பாபுவை துரத்திச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அவரால் ஓடமுடியாமல், தன் வைத்திருந்த கத்தியால், தனது கழுத்தை அறுத்துக்கொண்டு அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

இதனையடுத்து பகவதியும், ரமேஷ்பாபுவையும் மீட்டு கிராம மக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ரமேஷ்பாபு உயிரிழந்தார். இதனையடுத்து பகவதிக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.