16 வயது சிறுமியைக் காதலித்து பலாத்காரம் செய்த இளைஞன் மீது பாய்ந்தது போக்சோ!
By Arul Valan Arasu | Galatta | 12:43 PM
16 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி வீட்டை விட்டு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது ஷாம் சுந்தர் என்ற இளைஞர், சிறுமியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுமியை அவர் வீட்டை விட்டு அழைத்துக்கொண்டு எங்கேயோ சென்றுள்ளார்.
இதனால், பதறிப்போன சிறுமியின் பெற்றோர், தனது மகளைக் காணவில்லை என்று, கடந்த 15 ஆம் தேதி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அந்த சிறுமியே வழக்கறிஞர் மூலமாக, தான் ஷாம் சுந்தர் என்பவரைக் காதலிப்பதாகவும், அவருடன் விருப்பப்பட்டு, சுயநினைவுடன் தான் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஷாம் சுந்தரைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, போலீசார் விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து, சிறுமிக்கு 16 வயது மட்டுமே ஆவதால், அவரை காதல் என்ற பெயரில் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, ஷாம் சுந்தரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை அருகில் உள்ள கெல்லீஸ் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.