தன் மனைவியைக் கூட்டிக்கொண்டு ஓடிய அண்ணனைத் தட்டிக்கேட்காத தங்கையைக் கொன்றதாகக் கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாமக்கலில் கடந்த மாதம் இளம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது. நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்த விமல்ராஜ் - அனிதா தம்பதியினரைக் கடந்த மாதம் 6 பேர் சேர்ந்த கும்பல் வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து, விமல்ராஜ் - அனிதா இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் காதல் திருமணம் செய்த நிலையில், சாதியின் காரணமாக அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனாலும், போலீசார் விசாரணை துரிதப்படுத்தினர். அப்போது கொலைக்கான உண்மையான காரணம் தெரியவந்தது.

அதன்படி, கொலை செய்யப்பட்ட அனிதாவின் அண்ணன் அருணன், அவருடைய நண்பர் நிக்கில்சன் மனைவி சோபனாவுடன் தகாத உறவிலிருந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில், இருவருக்கும் கள்ளக் காதல் மோகத்தில், வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட நிக்கில்சன், அனிதாவிடம் வந்து, “உன் அண்ணன், தன் மனைவியுடன் ஓடி விட்டதாகக் கூறி, அழுதுள்ளார். ஆனால், அனிதா இது தொடர்பாகத் தனது அண்ணனைத் தட்டிக் கேட்காமல், மெத்தனமாக இருந்ததாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த நிக்கில்சன், அனிதாவையும், அவரது கணவர் விமல்ராஜையும் கொலை செய்துள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நிக்கில்சனை போலீசார் கைது செய்தனர்.