பைக் ரேஸில் அதிவேகமாகச் சென்ற இளைஞர்கள் மீது லாரி நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நாமக்கல் அடுத்த வேப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் பைக் ரேஸில் பறந்துள்ளனர். அப்போது ரோகித், அசேன், மணி ஆகிய 3 பேரும் ஒரே டூவிலரில் பைக் ரைட் சென்றுள்ளனர்.

நாமக்கல் - திருச்சி சாலையில் அவர்கள் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள இந்திரா நகர் வளைவில் அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிரே செங்கல் ஏற்றி வந்த லாரி, அவர்கள் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதில், 3 பேரும் சாலையில் தூக்கிவிசப்பட்டனர். அப்போது அவர்கள் 3 பேரும் ஹெல்மெட் அணியாமல் டூவிலர் ஓட்டியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரோகித், அசேன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மணி என்ற இளைஞர் மட்டும் பலத்த காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிரமாக சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நள்ளிரவு நேரங்களில் சில இளைஞர்கள் திருட்டுத்தனமாக பைக் ரேஸ்சில் ஈடுபடுவது தெரியவந்தது. குறிப்பாக, சம்பவத்தன்று 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேஸ்சில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதனையடுத்து, பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.