மாமியாரின் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மருமகள் அடித்து கொலை செய்து, தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டை சிமிக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த 23 வயதான சிலம்பரசன், சென்னையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது தந்தை குமார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், இரவது தயார் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிலம்பரசன், ஆந்திர மாநிலம் குண்டலம் மடுவு பகுதியைச் சேர்ந்த ஆனந்தனின் மகள் 19 வயதான அகல்யாவை, காதலித்துக் கடந்த மாதம் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தார்.

இதனையடுத்து, சிலம்பரசன் தனது தாயாரை சமாதானப்படுத்தி, மனைவியை தன் சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிலம்பரசன் வேலைக்குச் சென்றதும், அவரது தாயார், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத் தொடர்பிலிருந்து வந்ததும், அவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததும், அகல்யாவுக்குத் தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அகல்யா, தனது கணவரிடம் சொல்ல முற்பட்டுள்ளார். ஆனால், அதற்குள் சுதாரித்துக்கொண்ட சிலம்பரசனின் தயார், வரதட்சணை என்ற பெயரில், அகல்யாவைக் கொடுமைப் படுத்தத் தொடங்கி உள்ளார்.

மேலும், தன் மகன் சிலம்பரசனிடமும் சொல்லி, வரதட்சணை கேட்கத் தூண்டியுள்ளார். இதனால், இவரும் தினமும் வரதட்சணை கேட்டு அகல்யாவைத் துன்புறுத்தி வந்துள்ளனர்.

வீட்டை மீறி திருமணம் செய்துகொண்டதால், அகல்யா தன் வீட்டிற்கும் போக முடியாமல், வரதட்சணை கொடுமையால் தினமும் சித்ரவதை அனுபவித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று சிலம்பரசனும், அவரது தாயாரும் சேர்ந்து, அகல்யாவை வரதட்சணை கேட்டு அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். இதில், அவர் வலியால் சுருண்டு கீழே விழுந்தவர், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால், திட்டமிட்ட தாயும் மகனும், அகல்யா தற்கொலை செய்துகொண்டதுபோல், தூக்கில் தொங்கவிட்டு விட்டு, அங்கிருந்து தலைமறைவாகி உள்ளனர்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, போலீசார் வந்து உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள தாயையும், மகனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக் காதலை மறைக்க மாமியாரே, மருமகளை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.