சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி தற்கொலைக்குத் தூண்டிய 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம், பாகாயம் அருகில் உள்ள துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியில் பள்ளியில் படித்து வருகிறார். இதனிடையே, ஊரடங்கு காரணமாக, வீட்டிலிருந்த அவரை, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட பேர், தங்களது செல்போனில் ஆபாசமாகப் புகைப்படம் எடுத்துள்ளனர்.

பின்னர், அந்த புகைப்படத்தை வைத்து, சிறுமியை 3 பேர்களும் தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, நேற்று முன் தினம் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து, 90 சதவிகித தீக்காயங்களுடன் சிறுமிக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட கணபதி மற்றும் ஆகாஷ் ஆகிய 3 இளைஞர்களை போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கணபதி, ஆகாஷ் ஆகிய இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் குடியாத்தம் கிளை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, சிறுமிக்கு 90 சதவீதம் தீ காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது. இதனால், குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பேருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.