மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், பிளஸ் 1 மாணவியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கணவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஆசிரியர் காலனியை சேர்ந்த 23 வயதான பூபதி, அங்குள்ள காதக்கோட்டையில் பால்பண்ணையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்நிலையில், மூலனூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவியுடன் பூபதி அறிமுகமாகி, தனக்குத் திருமணம் அனாதை மறைத்து நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

மேலும், அந்த மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, அந்த மாணிவியுடன் வெளியே சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், பூபதியை நம்பிய அந்த மாணவி, கடந்த 4 நாட்களுக்கு முன்பு “பள்ளிக்கூடத்தில் ஹால்டிக்கெட் வாங்கி வருகிறேன்” என்று தனது பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு வெளியே சென்றிருக்கிறார். ஆனால், மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள மூலனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமியைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவல் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இளம்பெண்ணுடன் ஒரு இளைஞர் இருப்பதாக மூலனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அது மாயமான சிறுமி என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார், பூபதியை கைது செய்து இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும், பூபதியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதான பூபதி திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், பிளஸ் 1 மாணவியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கணவனை, போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.