கொரோனா தாக்கத்தால், சென்னையின் எந்தெந்த பகுதிகள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது? எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 அக உயர்ந்துள்ளது.

இதில், சென்னையில் மட்டும் 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இதுவரை 7 பேர் வரை கொரோனாவுக்கு சென்னையில் உயிரிழந்துள்ளனர். 24 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் பகுதியில் 73 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, திருவிக நகரில் 33 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 26 பேருக்கும், அண்ணாநகரில் 24 பேருக்கும். தண்டையார்பேட்டையில் 20 பேருக்கும் கொரோனா தாக்கி உள்ளது.

அதேபோல். தேனாம்பேட்டையில் 19 பேருக்கும், பெருங்குடி மற்றும் அடையாறில் தலா 7 பேருக்கும், வளசரவாக்கத்தில் 5 பேருக்கும், திருவொற்றியூரில் 5 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும், ஆலந்தூரில் 3 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆண்கள் 67.40 சதவீதம் பேரும், பெண்கள் 32.60 சதவீதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக, 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 50 பேர், கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும், 9 வயதுக்குக் கீழ் 2 பேரும், 10 வயது முதல் 19 வயதுள்ளோர் 19 பேரும், 20 வயது முதல் 29 வயதுள்ளோர் 34 பேரும், 40 வயது முதல் 49 வயதுள்ளோர் 42 பேரும், 50 வயது முதல் 59 வயதுள்ளோர் 41 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், 60 வயது முதல் 69 வயதுள்ளோர் 24 பேரும், 70 வயது முதல் 79 வயதுள்ளோர் 14 பேரும், 80 வயதுக்கு மேல் 3 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், சென்னையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது, அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், அடிப்படைத் தேவைகளுக்காக வெளியே வரும்போது, யாராக இருந்தாலும் அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.