2 முறை மதம் மாறி, 2 கல்யாணம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூரைச் சேர்ந்த தங்கபொன்சன், மும்பையில் கடந்த 2010ஆம் ஆண்டு பணியாற்றும்போது, கணவரை இழந்த இஸ்லாமிய பெண்ணான பாத்திமா என்பரை காதலித்து, மதம் மாறி திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தன.

பின்னர், சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்து தங்கியபோது, தங்கபொன்சன் பெற்றோருக்கு பாத்திமாவை பிடிக்காமல் போயிற்று. இதனால், தங்கபொன்சனின் மனசை மாற்றி, வேறு திருமணம் செய்து வைப்பதாக கூறி, அந்த பெண்ணை பிரிந்துவிடும் படி, அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி உள்ளனர்.

தங்கபொன்சனும் அதற்கு சம்மதித்து, தனக்கு வருமானம் இல்லை என்று பாத்திமாவிடம் கூறி, மும்பைக்கு அவரது அம்மா வீட்டிற்கு போகச் சொல்லியிருக்கிறார். மேலும், ஊரில் உள்ள சின்ன சின்ன வேலைகளை முடித்துவிட்டு. தானும் மும்பைக்கு வந்துவிடுவதாக உறுதி அளித்திருக்கிறார். இதை நம்பி, பாத்திமாவும், மும்பை சென்று, தனது அம்மா வீட்டுடன் தங்கி உள்ளார்.

இந்நிலையில், தங்கபொன்சனுக்கு அவரது பெற்றோர் கிறிஸ்தவ மதத்தில் ஷகீலா என்ற பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இதற்காக, தங்கபொன்சன், மீண்டும் மதம் மாறினார்.

இதனிடையே, கணவர் நீண்ட நாட்களாக மும்பை வராமல் இருப்பதால் சந்தேகமடைந்த பாத்திமா, செண்பகராமன் புதூருக்கு நேரில் வந்திருக்கிறார். அப்போது, தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆனதைக் கண்டும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக கேட்டதற்கு, அவரை தங்கபொன்சன், கடுமையாகத் தாக்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் பாத்திமா புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தங்கபொன்சனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, இந்துவாக இருந்த ஒருவர் இருமுறை வேறு வேறு மாதத்திற்கு மாறி, 2 முறை திருமணம் செய்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் தற்போது வைரலாகி வருகிறது.