பிறந்து சில மணி நேர்மையான குழந்தை முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள நுகர்வோர் பொருள் வாணிப கிடங்கு சாலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள முட்புதரிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.

 Vellore Girl baby

இதனால், அந்த வழியாகச் சென்றவர்கள் முட்புதரின் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, பிறந்து சில மணி நேரமேயான ஒரு அழகான பெண் குழந்தை ஒன்று, துணி சுற்றப்பட்ட நிலையில் கிடப்பது தெரியவந்தது.  

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், முட்புதரிலிருந்து குழந்தையை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பிறந்து சில மணி நேரங்கள் மட்டுமே ஆவதாகவும், குழந்தைக்கு உதட்டுப் பகுதியில் சிறு பிளவு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், குழந்தை 3.8 கிலோ எடையுடன், ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

 Vellore Girl baby​​​​​​​

இதனைத்தொடர்ந்து, குழந்தையை முட்புதரில் வீசப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், குழந்தை பிறந்தது தொடர்பான விபரங்களைச் சேகரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக குடியாத்தம் பகுதியில், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.