ஜெய்ப்பூரில் 2008 ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் கடந்த 2008 ஆம் ஆண்டு, மே மாதம் 13 ஆம் தேதி, தொடர்ச்சியாக 8 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில், 70 பேர் கொல்லப்பட்டனர். 185 பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில் 4 பேர் குற்றவாளிகள் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி முகமது சயீப், முகமது சர்வார் ஆஷ்மி, முகமது சல்மான், சயீப் ரகுமானுக்கு ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. அதேபோல், வழக்கில் தொடர்பில்லாத மற்றொருவர் ஷபாஸ் ஹுசைனையை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்நிலையில், இந்த 4 குற்றவாளிகளுக்கும் இன்று தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத்தண்டனை வழங்கி, ஜெய்ப்பூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.