மனைவி கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன், சுத்தியலால் கொடூரமாகத் தாக்கி மனைவியை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்குன்றத்தை அருகே ஆட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான துளசிராமன், சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு 28 வயதில் மனைவி அஞ்சம்மாள் மற்றும் 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இதனிடையே, அஞ்சம்மாளுக்கும் அதே பகுதியில் வசித்து வந்த அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த கள்ளக் காதல் விசயம், கணவன் துளசிராமனுக்கு தெரியவரவே, அதிர்ச்சியடைந்த அவர், “கள்ளக்காதலை கைவிடுமாறு” மனவைி அஞ்சம்மாளிடம் பக்குவமாகக் கூறியுள்ளார்.

ஆனால், கணவனை பொருட்படுத்தாத அஞ்சம்மாள், தனது உறவினருடன் தொடர்ந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. துளசிராமன் பலமுறை “கள்ளக்காதலை கைவிடுமாறு” தனது மனைவியுடன் கேட்டுக்கொண்டும் அவர், அதைக் கைவிட மறுத்துள்ளார். இதனால், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்நிலையில், கள்ளக் காதல் தொடர்பாக எப்போதும் போல், கணவன் - மனைவிக்கு இடையே நேற்றும் சண்டை வந்துள்ளது. அப்போது, கடும் ஆத்திரமடைந்த துளசிராமன், வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து அஞ்சம்மாளின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த அஞ்சம்மாள், அப்படியே மயங்கி உள்ளார். இதனால், பயந்துபோன துளசிராமன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து, வீட்டிலிருந்த குழந்தைகள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அஞ்சம்மாளை மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சோழவரம் போலீசார், மனைவியை கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக உள்ள துளசிராமனை தேடி வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக்காதலை மனைவி கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் செங்குன்றம் அருகே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.