மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், நள்ளிரவில் தூங்கும்போது மனைவியின் கழுத்தை, கத்தியால் அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் குருவராஜாகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த 44 வயதான ரமேஷ் - 39 வயதான புஷ்பா தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில், மகன் ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால், வீட்டில் ரமேஷ் - புஷ்பா மட்டும் இருந்து வந்துள்ளனர்.

இதனிடையே, புஷ்பாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தெரிந்த ரமேஷ், தன் மனைவியை கண்டித்துள்ளார்.

இது தொடர்பாகக் கணவன் - மனைவி இடையே பிரச்சனை வரவே, கணவருடன் சண்டைப்போட்டுவிட்டு, தனது அம்மா வீட்டிற்கு புஷ்பா சென்றுவிட்டார்.

இதனையடுத்து, அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் தனது கணவரைத் தேடி கடந்த 13 ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனைதொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, புஷ்பா அந்த குறிப்பிட்ட கூலித்தொழிலாளி வீட்டுக்குச் சென்று, அவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனை கணவர் ரமேஷ் நேரில் பார்த்து, கடும் ஆத்திரமடைந்துள்ளார்.

இதனால், மனைவி மீது சந்தேகப்பட்ட ரமேஷ், மீண்டும் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அன்று இரவு சண்டை முடியாத நிலையில், இருவரும் தூங்கச் சென்றுள்ளனர்.

அப்போது, நள்ளிரவு நேரத்தில் தனது மனைவி புஷ்பாவின் கழுத்தை, கத்தியால் அறுத்து, கொடூரமான முறையில் ரமேஷ் கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அங்குள்ள கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் அவர் சரண் அடைந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், புஷ்பாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கப் பதிவு செய்த போலீசார், ரமேஷை கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், தன் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.