நித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில், அவரை விசாரிக்க ப்ளு கார்னர் நோட்டீஸ் வழங்கவும் குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் சர்ச்சைக்குப் பெயர் போனவர் நித்தியானந்தா. குறிப்பாக,தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக் கொண்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தனது 4 பெண் பிள்ளைகளை நித்தியானந்தா, அவரது ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளதாகக் கடந்த மாதம், பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோர் குஜராத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த குஜாரத் போலீசார், அவரது ஆசிரமத்திற்குச் சென்றனர். ஆனால், நித்தியானந்தா அங்கு இல்லை. இதனையடுத்து, அவர் வெளிநாட்டில் இருப்பதாக அவரது சீடர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர் ஈகுவடார் நாட்டின் தீவு ஒன்றினை வாங்கி உள்ளதாகவும், அதனைத் தனி நாடாக அறிவிக்கக் கோரி ஐ.நா.சபையில் விண்ணப்பித்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால், இந்திய அரசு கடும் அதிர்ச்சியடைந்தது.

இதனைத்தொடர்ந்து, நித்தியானந்தா தங்களிடமிருந்து தீவு எதையும் வாங்கவில்லை என்று ஈகுவடார் அரசு மறுத்துள்ளது.

இந்நிலையில், நித்தியானந்தாவுக்கு 'புளூ கார்னர் நோட்டீஸ்' வழங்க குஜராத் போலீஸ் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நித்தியானந்தாவைக் கைது செய்யும் பொறுப்பு, சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலிடம் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, அடுத்த அதிரடியாக நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. புதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்த விண்ணப்பமும் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், நித்தியானந்தா வந்தால் இந்தியாவுக்குத் தெரிவிக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. குறிப்பாக, கடந்த 2008 ஆம் ஆண்டு, நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட் காலாவதி ஆகும் முன்பே 2018 ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், அவருக்கு புதிய பாஸ்போர்ட் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ்குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, நித்தியானந்தாவை விசாரிக்க ப்ளு கார்னர் நோட்டீஸ் வழங்க குஜராத் அரசு முடிவு செய்துள்ள நிலையில், அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்து மற்றொரு பக்கம் நெருக்கடி கொடுத்துள்ளது. இதனால், நித்தியானந்தாவுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதால், அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், நித்தியானந்தாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருப்பது பட்டவதனமாக தெரிகிறது.

என்னடா இது நித்தியானந்தாவுக்கு வந்த சோதனை?!