முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முதலமைச்சரின் இல்லமாக மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தங்களையே நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்றைய தினம் ஒத்திவைத்திருந்தனர்.

அதன்படி, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் அறிவித்தனர்.

அதன்படி, “ஜெயலலிதாவின் சொத்துகளில் ஒரு பகுதியை அறக்கட்டளை அமைக்க வேண்டும்” என்று நீதிபதி குறிப்பிட்டார்.

“ஜெயலலிதாவின் சொத்துகளில் தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தும்” சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், “இதுபற்றி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

குறிப்பாக, “போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றும், வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றிக் கொள்ளவும்” நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன், “ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்றக் கூடாது?” என்றும் நீதிமன்றம் கேள்வியும் எழுப்பியது.

இதனையடுத்து, ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கை, நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.