200 பயணிகள் ரயில்களின் கால அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் அதில் இடம் பெறவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து விதமான போக்குவரத்தும் முடக்கப்பட்டன. இதன் காரணமாக, விமானம், ரயில், பேருந்து என அனைத்துவிதமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதனிடையே, இந்த பொது முடக்கக் காலத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல், வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

அதன்படி ஏசி வசதி இல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரயில்களை நாடு முழுவதும் இயக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், வரும் ஜூன் 1 தேதி முதல் இயக்கப்படவுள்ள 200 ரயில்களின் பட்டியலை இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த 200 ரயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு, காலை 10 மணி முதல் தொடங்கி உள்ளது. அதன்படி, அந்த பட்டியலில் தமிழகத்திற்கான எந்த ரயில்களும் இயக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இந்த ரயில்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்றும், ஆர்.ஏ.சி, காத்திருப்போர் பட்டியலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் வருகிற 25 ஆம் தேதி முதல், உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.