10 வயது சிறுமியை 15 நாட்களாகத் தந்தையும் அவரது 2 கூட்டாளிகளும் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் குளத்துக்கடை கிராமத்தைச் சேர்ந்த குமார், கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி, கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்ற நிலையில், தன்னுடைய 10 வயது மகள் மற்றும் 5 வயது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

மது மதுபோதைக்கு குமார் அடிமையான நிலையில், அவருடைய 2 குழந்தைகளும், அங்குள்ள தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சிறப்புப் பள்ளியில் படித்து வருகின்றனர். குமாரின் 10 வயது மகள், அந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், குமாரின் வீட்டிற்கு அடிக்கடி வரும் அவரது 2 நண்பர்களுக்கும், சிறுமியின் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குமாருக்கு மது வாங்கித் தந்து, அவரை போதையில் மயக்கிவிட்டு, சாப்பாடு வாங்கித் தருவதாகச் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியை இருவரும் மாறி மாறி 15 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும், தந்தை குமாரும் குடிபோதையில், சிறுமியிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு, வலியால் துடிதுடித்து அழுதுள்ளார்.

இதனால், பயந்துபோன அக்கம் பக்கத்தினர் சிறுமியை கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தன்னை தனது தந்தையும், அவரது 2 நண்பர்களும் கடந்த 15 நாட்களாக மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதைச் சொல்லி அழுதுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாகத் தந்தை குமார், அருணாசலம், மயில்சாமி ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்,
அருணாசலத்தைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குமார் மற்றும் மயில்சாமியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், மயில்சாமியின் வீட்டுக்குள் புகுந்த கிராம மக்கள், அவரது வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை, தந்தை உட்பட 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.