பெற்ற மகளையே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரத் தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த மோகன், தினக் கூலியாக வேலை செய்து வந்தார். இவருக்கு 13 வயதில் மகள் ஒருவர் இருந்தார்.

இந்நிலையில், மகளிடம் சபலப்பட்ட மோகன், தன் மகள் என்றுகூட பாராமல் சிறுமியை மிரட்டியும், வற்புறுத்தியும் பலமுறை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து, பள்ளிக்குச் சென்ற சிறுமி, யாருடனும் பேசாமல் கடும் மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார். இது தொடர்பாக வகுப்பு ஆசிரியர் மாணவியிடம் பேச்சுக் கொடுத்து, என்னவென்று கேட்டுள்ளார். அப்போது, நடந்ததையெல்லாம் அழுதுகொண்டே, சிறுமி கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர் மாணவியைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சிறுமியின் தந்தை மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மோகனை கைது செய்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வழக்கு, ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைகள் முடிந்து தற்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, மகள் என்று கூட பாராமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மோகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், சிறுமி படித்து முடித்ததும், படிப்புக்கு ஏற்றார்போல், அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.