மோசடி நிறுவனத்தில் இயக்குனர்களாக இருந்ததாகக் கூறி, நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த சத்யுக் என்ற தனியார் நிறுவனத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம், வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபர் சச்சின் ஜோஷி என்பவர், 18 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி தங்க சேமிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளார்.

இந்த திட்டத்தில் சேரும்போது, 5 ஆண்டுகள் முடிவில் தள்ளுபடி விலையில் தங்கம் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால, 6 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்பது தெரியவந்துள்ளதாக, சச்சின் ஜோஷி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால், அந்த நிறுவனத்தில் இயக்குனர்களாக இருந்த ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது சச்சின் ஜோஷி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், 2014 ஆண்டு கால கட்டத்தில், இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக யார் யார் இருந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, இந்த குற்றச்சாட்டு உண்மையில்லை என்று மறுத்துள்ளார்.

இதனிடையே, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது மும்பை போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.