“இவரை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது!” என்று மணமகள் மணமேடையிலேயே தெரிவித்துவிட்டு, மாலையை உதறி விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீர்கஞ்ச் பகுதியில் ராணுவ வீரர் ஒருவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்தது.

மறுநாள் காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில், முதல் இரவு திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.

அதில், மாப்பிள்ளையின் தங்கை மேடையில் ஏறி, பாடலுக்கு நடனம் ஆடி, அனைவரையும் உற்சாகப்படுத்தினார். ஆனால், தங்கை நடனம் ஆடுவதைப் பார்த்து ஆத்திரமடைந்த மாப்பிள்ளை, தான் திருமணக் கோலத்தில் மாப்பிள்ளையாக நிற்பதைக்கூட மறந்துவிட்டு, மணமேடையில் இருந்த நாற்காலியை எடுத்து, எல்லோர் முன்பும் தனது தங்கையைத் தாக்கி உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மணப்பெண், மணமேடையிலேயே மாலையை உதறி விட்டு, அப்படியே எழுந்து நின்றார். இதனைப் பார்த்த இருவீட்டார் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். அங்கு கூடியிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இருவீட்டார் பெற்றோர்களிடமும், “இப்படி ஒரு முன் கோபக்காரருடன், என்னால் வாழ முடியாது என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு” அங்கிருந்து வேகமாகத் தனது வீட்டிற்கு வந்துவிட்டார்.

மணப்பெண் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இருவீட்டார் பெற்றோர்களும், மணப்பெண்ணை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாத அந்த பெண், தனது வீட்டிற்கு வந்துவிட்டார். இதனையடுத்து, வேறு வழியில்லாமல், அந்த திருமணம் பாதியிலேயே அப்படியே நின்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.