ஊரடங்கு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பார்வை குறைபாடுள்ள பெண், மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலைச் சேர்ந்த 53 வயதான பெண்மணி ஒருவர், அந்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஆனால், அவருக்குப் பார்வை குறைபாடு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த மாதம் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கணவரும், அவரது குடும்பத்தினரும் ராஜஸ்தான் மாநிலத்தில் சிக்கிக்கொண்டனர். ஊரடங்கால், அவர்களால் சொந்த ஊர் திரும்ப முடியவில்லை.

இதனால், அந்த பார்வை குறைபாடு உள்ள பெண் மட்டும், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில், அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், அந்த பெண்ணை, பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண், மருத்துவ பரிசோதனைக்கா உட்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, விசாரணை இன்னும் துரிதப்படுத்த முடியும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஊரடங்கு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பார்வை குறைபாடுள்ள பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.