பாஜக எம்.பி.யை விமான பயணிகள் சரமாரியாகத் திட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய நாடாளுமன்றத்தில், “காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்!” என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் பாஜக பெண் எம்.பி. பிரக்யா தாக்கூர். அதன் பிறகு, அவர் மன்னிப்பு கேட்டு, சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது, மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அதன்படி, கடந்த 21 ஆம் தேதி, ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் டெல்லியிலிருந்து, போபால் சென்றார். அப்போது, முன்பதிவு செய்த முதல் வரிசை இருக்கையில் அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவர், விமானத்தில் ஏறியதும் விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக விமானம் புறப்பட சுமார் 45 நிமிடங்கள் காலதாமதம் ஆனது. இதனால், ஆத்திரமடைந்த சக பயணிகளும், பாஜக எம்.பி.யிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், “தயவு செய்து நீங்கள் இறங்கி அடுத்த விமானத்தில் வாருங்கள்” என்றும் சக பயணிகளும் கூறியுள்ளனர். இதனால், பாஜக எம்.பி. மேலும் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, அவர் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், மேலும் கடுப்பான பயணிகள் பாஜக எம்.பி.யை இறக்கிவிட்டு விமானத்தை இயக்குமாறு, விமான ஊழியர்களிடம் சக பயணிகளும் முறையிட்டனர்.

இதனையடுத்து, “ முதல் வகுப்பு இருக்கை என்பது உங்களின் உரிமை அல்ல. ஒரு தலைவரைப் போன்று நடந்துகொள்ளுங்கள். உங்களால் ஒரு பயணி பாதிக்கப்பட்டாலும், அதற்கான தார்மீக பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் ஒருவரால், விமானத்தில் உள்ள 50 பேரும் பாதிக்கப்படுகிறார்கள். 50 பேரையும் இப்படி துன்பப் படுத்துவது தகுமா?” என்று விமான ஊழியர் ஒருவர் அவரிடம் பதில் அளித்திருக்கிறார்.

அதன் பிறகே, விமான ஊழியர் வழங்கிய பின் வரிசை இருக்கையில் அமர்ந்து, அவர் பயணம் செய்தார். விமானம் போபால் வந்ததும், அங்குள்ள ஸ்பைஸ்ஜெட் அலுவலகத்தில், புகார் அளித்தார். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரிப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனிடையே, பாஜக எம்.பி.யை சக பயணிகளும் சரமாரியாகத் திட்டிய வீடியோ, இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.