ஆபாச இணைய தளங்களில் பிரபல நடிகை காயத்ரியின் நம்பரை பதிவிட்ட பீட்சா டெலிவரி செய்த ஊழியரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கிய “அஞ்சலி” படத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகை காயத்ரி ராவ். அதன்பிறகு, ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தேனாம்பேட்டை சீதாம்மாள் காலணியில் வசித்து வரும் நடிகை காயத்ரி ராவ், “எனக்கு ஆபாச போன் கால்கள் வருவதாகவும், அதில் பேசுபவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி, என்னை அசிங்கப் படுத்துகிறார்கள்” என்றும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

மேலும், அந்த புகாரில் கடைசியாகத் தொடர்புகொண்டு, மிகவும் ஆபாசமாகப் பேசியதாக “சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ், மகேஸ்வரன்” ஆகியோர்களின் பெயர்களையும், அவர்களது தொலைப்பேசி எண்களையும் பதிவிட்டு இருந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்கள் 3 பேரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, நடிகை காயத்ரி ராவின் நம்பர், ஆபாச இணைய தளங்களில் இருந்ததாகவும், குறிப்பாக தாங்கள் வைத்திருக்கும் “ஆபாச வாட்ஸ்ஆப் குழுவில்” பகிரப்பட்டு இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் பயன்படுத்தும் ஆபாச வாட்ஸ்ஆப் குழுவைப் பார்த்தபோது, அதில் 100 க்கணக்கான ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும், அந்த குழுவில் நடிகையின் நம்பரைப் பதிவு செய்தது, பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரன் என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து பரமேஸ்வரனிடம் நடத்திய விசாரணையில், “நடிகை காயத்ரி ராவ், கடந்த 9 ஆம் தேதி, பீட்சா ஆர்டர் செய்தபோது, அவருக்கும், டெலிவரி செய்யப்போன பரமேஸ்வரனுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. அந்த கோபத்தில், அந்த நடிகையைப் பழிவாங்கவே, குரூப்பில் நடிகையின் எண்ணைப் பதிவிட்டு, ஆபாச இணையதளத்திலும் பதிவிட்டதும்” தெரியவந்தது.

இதனையடுத்து, பரமேஸ்வரனை கைது செய்த போலீசார், இதுபோன்று வேறு யாருடைய போன் நம்பர் எல்லாம் இப்படி தவறாகப் பகிரப்பட்டுள்ளது என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.