‘என் அம்மாவிற்கு அழகான ஆண் துணை தேவை’ என்று இளம்பெண் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா சக்தி மிக்க நாடாக வளர்ந்து டிஜிட்டல் மயமானாலும், பெண்கள் மீதான பார்வை மட்டும் இன்னும் முழுமையாக மாறவில்லை.

டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெண்கள் விசயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், நகரங்களைத் தாண்டிய மற்ற ஊர்களிலும், கிராமப்புறங்களிலும் பெண்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் தான் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாகப் பெண்களுக்கு 2 வது திருமணம் என்பது, சமூகத்தால் உற்று கவனிக்கப்படும் ஒரு விசயமாக இன்றளவும் பார்க்கப்படுகிறது. பெண்களின் 2 வது திருமணம் விவாத பொருளாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் வட இந்தியாவைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி அஸ்தா வர்மா, தனது 50 வயது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, தனது அம்மாவிற்கு நல்ல ஆண் துணை தேவை என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “என்னுடைய அம்மாவிற்கு 50 வயதுடைய அழகான ஆண் துணையைத் தேடுகிறோம். வெஜிடேரியன், குடிப்பழக்கம் இல்லாதவர், எல்லோரும் நன்றாகத் தெரிந்தவராக இருக்க வேண்டும்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன், அந்த பதிவில் #Groomhunting என்ற ஹேஷ்டேக்குடன் அவர் டிவிட் செய்துள்ளார்.

இதற்கு, பல்வேறு தரப்பினரும் பதில் அளித்து வருகின்றனர். அதில், சிலருக்கு அஸ்தா வர்மா பதில் அளித்துள்ளார். அதில், குறும்புக்காரர் ஒருவர், பிரதமர் மோடி புகைப்படத்தைப் பதிவிட்டு, இவர் தான் எல்லோருக்கும் தெரிந்தவர் என்று பதில் அளித்துள்ளார். இதனிடையே, ஆஸ்தா வர்மாவின் இந்த டிவிட்டர் பதிவு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.