அரசு சிறுமிகள் காப்பகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 5 பேர் கருவுற்று இருப்பதாகவும், ஒருவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு சிறுமிகள் காப்பகத்தில்தான் இந்த பாலியல் பலாத்கார கொடூர சம்பவம் நடந்துள்ளது.

தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசு சார்பில், கான்பூர் அரசு சிறுமிகள் காப்பகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, இந்த சோதனையில் அந்த அரசு காப்பகத்தில் உள்ள 57 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அங்குள்ள சிறுமிகளில் 5 பேர் கருவுற்று இருப்பதும், ஒரு பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய்த் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “முசாஃபர்பூர் காப்பகத்தில் நடைபெற்ற சம்பவத்தைப் போன்றே, கான்பூர் சிறுமிகள் காப்பகத்திலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்திருப்பது கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. உண்மை சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன. உத்தரப்பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் பல்வேறு மனிதத் தன்மையற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த செய்தி, அந்த மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இந்த வழக்கில் விசாரணை தொடர்பாக பேசிய கான்பூர் மாவட்ட ஆட்சியர் ராம் திவாரி கூறும்போது, “இந்தக் காப்பகத்தில் 7 கர்ப்பமான சிறுமிகள் வசித்து வந்தார்கள் என்றும், அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

“அந்தச் சிறுமிகள் காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டபோதே கருவுற்று இருந்தனர் என்றும், குழந்தைகள் நல அமைப்பு பரிந்துரை செய்யப்பட்டதன் பேரில் அவர்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்றும், குழந்தைகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏதாவது நிகழ்ந்ததா என்று விசாரித்து வருகிறோம்” என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

மேலும், மாநில பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் பூனம் கபூர், “ சிறுமிகள் காப்பகத்தில் தங்கியிருந்தபோது 5 சிறுமிகள் கர்ப்பம் அடைந்தனர்” என்ற கருத்தை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

அதேபோல், “முசாஃபர்பூரில் ஏற்பட்டதைப் போன்று எந்த அசம்பாவிதமும் இங்கு நடைபெறவில்லை” என்று கான்பூர் போலீஸ் சூப்பிரெண்டு தினேஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனாலும், அரசு சிறுமிகள் காப்பகத்தில் 5 பேர் கருவுற்று இருப்பதாகவும், ஒருவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம், அந்த மாநிலத்தில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.