சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியே பாலியல் தொழிலுக்குத் தள்ளிய உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, ஏழ்மை காரணமாக வேலைக்குச் சென்று வருகிறார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் அவர் வீட்டில் குளித்துக்கொண்டிருக்கும் போது, அவரது உறவுக்கார பெண் 30 வயதான லினட் என்பவர், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

மாணவி குளித்து முடித்து வந்த பிறகு, சிறுமியிடம் அந்த வீடியோ காட்டி, இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கடுமையாக மிரட்டி உள்ளார். இதில், பயந்த சிறுமி அந்த பெண் சொல்வதுபோல் கேட்டுள்ளார்.

சிறுமியின் பயத்தைப் பயன்படுத்திக்கொண்ட அந்த பெண், அந்த பெண்ணை மிரட்டியே, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். அந்த சிறுமியும், கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வேலைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்ற நிலையில், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், சிறுமி காணாமல் போன சில நாட்கள் கழித்து, திருவனந்தபுரம் பகுதியில் சிறுமி தன் சுய நினைவின்றி தவித்ததாக உறவினர் ஒருவர் பார்த்து, வீட்டிற்கு அழைத்து வந்து சிறுமியின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சிறுமியின் நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதனால், பயந்துபோன பெற்றோர்கள், சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, மருத்துவர்களிடம் தனக்கு நேர்ந்த அவலங்களைச் சிறுமி கூறியதைக் கேட்டு, மருத்துவர்களும், சிறுமியின் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, உறவுக்கார பெண் லினட் மீது புகார் கொடுக்கப்பட்டதையடுத்து, போலீசார் அவரையும், பாலியல் பலாத்காரம் நடந்ததாகச் சொல்லப்பட்டும் லாட்ஜ் உரிமையாளர் உட்பட மொத்தம் 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.