10 ஆம் வகுப்பு மாணவியை விருந்துக்கு அழைத்துச் சென்று, அவரது குடும்பத்தினரே கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த கோவிலூர் தோப்புப் பட்டியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2 மகள்கள் இருந்துள்ளனர்.

இதில், மூத்த மகள் நதிவதனாவை கடந்த ஆண்டு, அந்த பகுதியில் உள்ள சின்ன தாராபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனிடையே, நதிவதனாவின் தங்கை 10 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், செல்வத்தின் தம்பி தமிழரசன் ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளான்.

மேலும், தனது காதல் விசயத்தைத் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்களும் அந்த பெண்ணை தங்களது மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இது குறித்து அந்த பெண்ணின் அக்காவான, நதிவதனாவிடம் கணவர் செல்வம், மாமியார் காளீஸ்வரி ஆகியோர் பேசி வரதட்சணை எதுவும் தரவேண்டாம், திருமணம் மட்டும் செய்துகொடுத்தால் போதும் என்று கூறி சம்மதிக்க வைத்துள்ளனர்.

நதிவதனாவும், வரதட்சணை இல்லாமல் தனது தங்கைக்குத் திருமணம் நடக்கிறதே என்று நினைத்து, தனது கணவரின் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது பெற்றோரிடம் பேசிய நதிவதனா, தனது தங்கையை விருந்துக்கு அழைத்து வருவதாக கூறி, ரகசியமாக அழைத்து வர செய்துள்ளார்.

அதன்படி, 10 ஆம் வகுப்பு படிக்கம் தனது மகளை, அவரது பெற்றோரே பொய் சொல்லி அழைத்து வந்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு கோயிலுக்கு வந்ததும், அந்த சிறுமியைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து, நதிவதனா தனது கணவர் மற்றும் அவரது வீட்டாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வந்துள்ளார். இதனால், கிரிமினலாக யோசித்த நதிவதனா, “10 ஆம் வகுப்பு படிக்கும் தனது தங்கையை, எனது கணவரும், எனது மாமியாரும் கட்டாயப்படுத்தி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக” அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, நதிவதனாவின் கணவர் மற்றும் அவரது மாமியாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த சிறுமிக்கு இருவீட்டார் சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற்றது என்றும், இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததே நதிவதனா தான் என்பதும் தெரியவந்தது.

குறிப்பாக, திருமணத்தின்போது அந்த சிறுமி புடவை அணியாமல் சுடிதார் மட்டுமே அணிந்து இருந்ததும் அந்த வீடியோவில் தெரியவந்தள்ளது. அந்த அளவுக்கு அவசர அவசரமாக இந்த திருமணம் நடைபெற்றதையும் போலீசார் உறுதி செய்தனர்.

இதனையடுத்து, வழக்கு தொடர்ந்த நதிவதனாவையும் கைது செய்த போலீசார், இருவீட்டாரையும் சேர்ந்து மொத்தம் 10 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.