ஆக்சன் கிங் அர்ஜுனின் தாயார் காலமானார்!
By Anand S | Galatta | July 24, 2022 10:55 AM IST
தென்னிந்திய திரை உலகின் மிக முக்கிய நடிகராக திகழும் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் கதாநாயகன் & வில்லன் என எந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும் மிகச்சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர். மேலும் முதல்முறை தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் கடந்த ஆண்டு(2021) ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அடுத்ததாக தமிழில் இயக்குனர் தினேஷ் லஷ்மன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து தீயவர் குலைகள் நடந்த படத்தில் நடித்து வரும் அர்ஜுன், தொடர்ந்து ஜீவாவுடன் இணைந்து மேதாவி திரைப்படத்திலும் மலையாளத்தில் தயாராகும் விருன்னு திரைப்படத்திலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
மேலும் இயக்குனராகவும் தொடர்ந்து படங்களை இயக்கி வரும் ஆக்சன் கிங் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதனிடையே ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் தாயார் காலமானார்.
அர்ஜுன் அவர்களின் தாயார் லட்சுமி தேவி நேற்று ஜூலை 23ஆம் தேதி காலமானார். 85 வயதான லட்சுமி தேவி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் அவர்களின் தாயார் லட்சுமி தேவியின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.