3 நாளில் 3 குழந்தைகளைப் பலி கொடுத்த பெற்றோர்கள்!
By Galatta Review Board | Galatta | 06:16 PM
தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 நாட்களில் 3 சிறுவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 25 ஆம் தேதி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுஜித், அந்த பகுதியில் மூடப்படாமல் கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்தார்.
சுஜித் உயிரிழந்ததைத் தமிழக மக்களே நேற்று தங்கள் வீட்டில் உள்ள டி.வி.யின் மூலம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி திரேஸ்புரும் பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் - நிஷா தம்பதியினரும் சுஜித் செய்தியை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தனர். இதனால், தங்களது 2 வயதுக் குழந்தை சஞ்சனாவை, அவர்கள் கவனிக்க மறந்துவிட்டனர்.
குழந்தை சஞ்சனா, விளையாடிக்கொண்டிருக்கையில் வீட்டின் குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூச்சு முட்டி உயிரிழந்தார்.
இதேபோல், இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புங்கம்பட்டியில், மதியழகன் என்பவரின் 10 மாத குழந்தை லோகேஷ், வீட்டில் தவழ்ந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது, பெற்றோரின் கவனக்குறைவால், வீட்டில் தரை மட்ட அளவில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது.
சிறுமி சஞ்சனா, குழந்தை லோகேஷ் அடுத்தடுத்த நாளில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குழந்தைகளின் உயிரிழப்புக்குப் பெற்றோர்களின் கவனக்குறைவே காரணம் எனக் குற்றம்சாட்டினர். மேலும், இது தொடர்பாகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 3 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது, தமிழக மக்களைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.