தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கணவனைக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். 

சென்னை அடுத்த புழல் புத்தகரத்தைச் சேர்ந்த சுரேஷ் - அனுசுயா தம்பதிகளுக்குக் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தற்போது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சுரேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து  மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது.

mixing sleeping pills in dosa

இதனால், வெறுத்துப்போன அனுசுயா, தனது உறவினர் முரசொலிமாறன் உதவியுடன், கடையில் தூக்க மாத்திரை வாங்கி வந்து, தோசை மாவில் கலந்து தோசை சுட்டுக் கொடுத்துள்ளார். இதனைச் சாப்பிட்ட சுரேஷ், அடுத்த சில நிமிடங்களிலேயே மயங்கி உள்ளார்.

இதனையடுத்து, தனது துப்பட்டாவால் கணவரின் கழுத்தை நெறித்து, அவரை கொலை செய்துள்ளார். பின்னர், போலீசாருக்கு போன் செய்து தனது கணவர், வீட்டில் இறந்து கிடப்பதாகக்  கூறி உள்ளார். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

mixing sleeping pills in dosa

அப்போது, சுரேஷ் அதிக அளவிலான தூக்க மாத்திரை சாப்பிட்டதால், அவர் உயிரிழந்ததாகவும், குறிப்பாகக் கழுத்தில் காயங்கள் இருப்பதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அனுசுயாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது உறவினர் முரசொலிமாறன் உதவியுடன், அனுசுயா கணவரைக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து, அனுசுயாவை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முரசொலிமாறனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.