"கமலிடம் விளக்கமளித்து விட்டேன்" சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ராகவா லாரன்ஸ்!
By Arul Valan Arasu | Galatta | 05:16 PM
"கமலிடம் விளக்கமளித்து விட்டேன்" என்று நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தர்பார் ஆடியோ வெளியிட்டு விழாவில், நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, கமல் பற்றி சில கருத்துக்களை அவர் தெரிவித்தார். ஆனால் ராகவா லாரன்ஸ், கமல் பற்றி தவறாகப் பேசியதாக, தகவல்கள் வெளியே பரப்பப்பட்டன. சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக எதிர் கருத்துக்கள் பேசப்பட்டன.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாள் விழா, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், தான் கமல் பற்றிப் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார். அதற்காக, தான் கமலிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் ராகவா லாரன்ஸ் கூறினார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை, இன்று அவரது இல்லத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, அவரிடம் நடிகர் ராகவா லாரன்ஸ், தான் பேசிய கருத்து பற்றி விளக்கம் அளித்தார்.
அதன்பின், இந்த சந்திப்பு பற்றி நடிகர் ராகவா லாரன்ஸ், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, “அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் குறித்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
எனது பேச்சு வேண்டுமென்றே தவறாகத் திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன்.
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன்.
எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட திரு.கமல்ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது, நடிகர் ராகவா லாரன்ஸின் கமல் பற்றிய இந்த முகநூல் பதிவு, வைரலாகி வருகிறது.