தமிழ் திரையுலகில் பிஸியான ஹீரோக்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து ஒரு குட்டி லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு நடிகை டாப்ஸியுடன் ஆனபெல் சுப்ரமணியம் படத்தில் நடித்து முடித்தார். 

சமீபத்தில் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவான லாபம் படத்தில் நடித்து முடித்தார். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

கடந்த மாதம் 800 திரைப்படத்தில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியதால் முரளிதரனின் விடுத்த அறிவிப்பை ஏற்று விலகினார். அதைத் தொடர்ந்து டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார். 

தமிழ் படங்கள் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தியில் ஆமிர் கானுடன் லால் சிங் சத்தா ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் ஜெயராமுடன் மார்க்கோனி மத்தாய் படத்தில் கவுரவக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதற்குப் பிறகு சில வாய்ப்புகள் வந்தாலும் தேதிகள் பிரச்சினை காரணத்தால் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.

தற்போது, இயக்குநர் வி.எஸ்.இந்து கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே உடனே ஒப்பந்தமானார் விஜய் சேதுபதி. இதில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு இம்மாதம் தொடுபுழாவில் தொடங்கவுள்ளது.

19(1)(a) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிக்கவுள்ளது. இதற்கு இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணியபுரியவுள்ளார்.

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.