விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை ! அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு
By Aravind Selvam | Galatta | February 06, 2020 18:11 PM IST
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் பிகில்.ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிநடை போட்ட இந்த படம் 300 கோடி வசூல் செய்துள்ளது என்று படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் அறிவித்தார்.இதனை தொடர்ந்து நேற்று முதல் ஏ.ஜி.எஸ் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.
மேலும் இந்த படம் தொடர்பாக பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் விஜயிடமும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.நேற்று தொடங்கிய இந்த சோதனை இன்றும் சில இடங்களில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வருமான வரித்துறையினர் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பிகில் படம் 300 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்திருக்கும் என்றும் இது குறித்து தான் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.அன்புச்செழியனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.77 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளதென்றும் தெரிவித்துள்ளனர்.
விஜயிடமிருந்தோ,தயாரிப்பு நிறுவனத்திடமிருந்தோ ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விஜயிடம் இருக்கும் அசையா சொத்துக்கள் குறித்தும் அவர் பிகில் படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.