மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை பலி! - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
By Arul Valan Arasu | Galatta | 04:12 PM
மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை பலியான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த கோபால், தனது மனைவி மற்றும் தனது 3 வயது மகன் அபினேஷ் உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் மேம்பாலத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, காற்றிலிருந்து பறந்து வந்த, பட்டம் விடும் மாஞ்சா நூல், சிறுவனின் கழுத்தைப் பதம் பார்த்துள்ளது.
இதனையடுத்து, தனது டூவிலை சாலையிலேயே நிறுத்தி, குழந்தையைப் பார்த்துள்ளார். குழந்தைக்குக் கழுத்திலிருந்து ரத்தம் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவசர அவசரமாகக் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பட்டம் விட்டு விளையாடிய கொருக்குப்பேட்டை நாகராஜ் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் மாஞ்சா நூல் விற்கப்படுகிறதா என்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, 3 வயது சிறுவனை மாஞ்சா நூல் அறுத்த சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சி.சி.டி.வி. காட்சிகள், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.