கள்ளக் காதல் வெளியே தெரிந்ததால் ஜோடி தற்கொலை!
By Arul Valan Arasu | Galatta | 05:17 PM
கள்ளக் காதல் விவகாரம் தங்கள் குடும்பத்தினருக்குத் தெரிந்ததால் ஜோடிகள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அரையாளம் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான சுதாகர் என்பவருக்கு, உமா என்ற மனைவியும் 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
அதுபோல், சுதாகர் வீட்டின் எதிர் வீட்டில் வசித்த வந்த 43 வயதான தேன்மொழிக்கு, மூர்த்தி என்ற கணவரும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் சுதாகருக்கும், தேன்மொழிக்கு இடையே நீண்ட வருடங்களாகத் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரது வீட்டில் யாரும் இல்லையென்றால், ஒருவர் வீட்டிற்கு ஒருவர் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில், இந்த கள்ளக் காதல் விவகாரம் இருவர் வீட்டிற்கும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவர் வீட்டிலும் கடுமையாக எச்சரித்து, கள்ளக் காதலைக் கைவிடுமாறு வலியுறுத்தி உள்ளனர்.
கள்ளக் காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால், இருவரும் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட நிலையில், அவமானம் தாங்காமல் அப்பகுதியில் உள்ள உயர்மின் கோபுரத்தில் இருவரும் ஜோடியாகச் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
தற்கொலை சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார், 2 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.