சந்திரா ஆர்ட்ஸ் இசக்கி துரை தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். கனிகா, மோகன் ராஜா, ரித்விகா, விவேக், சின்னி ஜெயந்த் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தனது உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை பழனியில் துவங்கி வைத்தார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து முடிந்தது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் நடிகர்கள் மற்றும் சினிமா சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் வீட்டிலே முடங்கியுள்ளனர். அரசு உத்தரவு படி சமூக இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் படங்களின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமானது. நடிகை ரித்விகா தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்தார்.