இந்திய திரையுலகில் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர் சியான் விக்ரம். தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சியான் விக்ரம் கைகோர்க்கவுள்ளதாக சமீபத்தில் சுவையூட்டும் செய்தி கலாட்டா செவிகளுக்கு எட்டியது.

கார்த்திக் சுப்புராஜ் கூறிய கதை சியான் விக்ரமுக்கு மிகவும் பிடித்துவிட்டதால், இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் துருவ் விக்ரமும் இந்த படத்தில் உள்ளதாக செய்திகள் வெளியானது. படத்திற்கு படம் வித்தியாசம் தரும் கார்த்திக் சுப்பராஜ், இதிலும் தனது மாறுபட்ட ஜானரில் விருந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இப்படத்தில் முக்கிய ரோலில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாகவும், படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசை என்ற பேச்செல்லாம் இணையத்தில் வலம் வருகிறது. செய்தியே மாஸாக இருக்கிறது, இந்த காம்போ திரையில் தோன்றினால் என்ன ஆகுமோ என்ற ஆவலில் உள்ளனர் சினிமா பிரியர்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.