கடந்த மாதம் நடந்த விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா பேசிய பேச்சு பல தரப்பினரிடையேயும் விவாதத்திற்கு உள்ளானது.இவரது பேச்சு மிகவும் தவறானது என்று சிலர் போர்க்கொடி தூக்கினர்.இவரது பேச்சுக்கு சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
ஜோதிகாவுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் எழுப்பினர்.பலரும் ஜோதிகா பேசியதில் தவறேதும் இல்லை தவறாக புரிந்துகொள்ளப்பட்ட கருத்து என்று விளக்கமளித்தனர்.இந்நிலையில் தற்போது நடிகரும்,ஜோதிகாவின் கணவருமான சூர்யா இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், எப்போதோ ஜோதிகா பேசியது இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது. 'கோவில்களை போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும்' என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.
இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீக பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர்.மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நண்பர்கள் , நல்லோர்கள் எங்கள் துணை நிற்கிறார்கள் .
முகம் தெரியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பில் பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையை கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.