நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கடந்த மே மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், லாக்டவுன் காலத்தில் மருந்து கடைகளுக்கு வரவேண்டிய சப்ளை வராமல் இருக்கலாம். வெளிநாடுகளிலிருந்து வர வேண்டிய மருந்துகள் லாக்டவுனால் மருந்துக் கடைக்கு வந்து சேர முடியாது. அதனால் சில மருந்து கடைகளில் பழைய மருந்துகள் இருப்பு இருக்கலாம்.

மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் வாங்கும் மருந்துகளின் காலாவதி தேதியை கவனமாக பார்த்த பின்னரே வாங்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு வாங்கும் பால் பவுடர், ஷாம்பூ, பேபி ஆயில் போன்ற அனைத்து பொருட்களின் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது மிக மிக அவசியம். காலாவதியான மருந்துகளை உபயோகிப்பதால் உடலில் பல உபாதைகள் வரலாம்.

மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த காசில்தான் மருந்து வாங்க வருகிறார்கள். அவர்கள் வாங்கும் மருந்து அவர்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் வாங்குகிறார்கள். தயவு செய்து உங்கள் கடைகளில் காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்ய ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தற்போது இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த சூழலில் மருந்து வாங்குவோருக்கு தேவைப்படும் முக்கியமான செய்தி. திவ்யா சத்யராஜ் ஒரு முக்கியமான விஷயத்தை கூறியிருக்கிறார். எனக்கு தோன்றியதை நீங்களும் நினைத்தால் இந்த மெசேஜை பகிருங்கள் என்று பிரபல நாளிதழ் பகிர்ந்த புகைப்படத்தையும் இணைத்துள்ளார். தந்தை சத்யராஜ் போலவே சமூக அக்கறை அதிகம் கொண்ட திவ்யா, மக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருவதால் அவரை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.